சண்முகபாண்டியனுக்கு நான் இருக்கேன்.. இணைந்து நடிப்பேன்.. ராகவா லாரன்ஸ் எமோஷனல்!

Manjula Devi
Jan 10, 2024,04:40 PM IST

சென்னை:  கேப்டன் விஜயகாந்த் சார் மீது கொண்ட அன்பு மரியாதை காரணமாக, நான் விஜயகாந்த் சாரின் மகனுடன் இணைந்து சிறப்பு வேடத்தில் நடிக்க தயாராக உள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேற்று முன்தினம் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அவருடைய அம்மாவுடன் பிரேமலதா விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.


இந்நிலையில் விஜயகாந்த்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் உடன் இணைந்து சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:




எல்லோருக்கும் வணக்கம். நான் உங்கள் ராகவா லாரன்ஸ் பேசுகிறேன். நேற்று முன்தினம் விஜயகாந்த் ஐயா நினைவிடத்திற்கு நானும், என் அம்மாவும் போயிருந்தோம். பிறகு விஜயகாந்த் சார் இல்லத்திற்கு சென்றோம். விஜயகாந்த் சார் மனைவி, சுதீப் சார் மற்றும் அவருடைய இரு மகன்கள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் தங்கையும் உடன் இருந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 


அப்போது பிரேமலதா விஜயகாந்த்தின் தங்கை கூறுகையில், சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார். நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் மாஸ்டர் என கூறினார். அந்த வார்த்தையை கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. விஜயகாந்த் சார் எத்தனையோ ஹீரோவுக்கு உதவி செய்திருக்கிறார்.

எத்தனையோ தர்ம காரியங்களை செய்து இருக்கிறார். பிரேமலதா தங்கை கூறிய நீங்கள் தான் இவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வார்த்தை இரண்டு நாட்களாக ஒரு மாதிரியாக இருந்தது. 


ஏதோ ஒன்று பண்ண வேண்டும் என தோன்றி கொண்டே இருந்தது. அந்த பசங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். கேப்டன் மற்ற ஹீரோக்கள் படத்துல கெஸ்ட் ரோல் பண்ணுவார் சண்டை, பாடல்களில் வந்து மற்றவர்களை வளர்த்து விட்டவர் விஜயகாந்த் சார். கண்ணுபட போகுதய்யா  படத்தில் உள்ள மூக்குத்தி முத்தழகு என்ற பாடலில் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். ரொம்ப அழகாக ஆடியிருப்பார். என்னையும் ரொம்ப ஊக்குவிப்பார். 


இப்படி  நிறைய பேருக்கு உதவிய விஜயகாந்த் சார் குடும்பத்திற்கு நாம ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது. அந்தப் பையன்  நடித்த படம் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்துக்கு நல்ல ஓபனிங் கொடுக்க வேண்டும். அந்தப் படத்திற்கு எவ்வளவு பப்ளிசிட்டி செய்ய முடிகிறதோ.. அந்த பப்ளிசிட்டிக்காக என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ.. அதை முழுக்க முழுக்க நான் இறங்கி பண்ணலாம்.. என்று நினைக்கிறேன்.


அது மட்டுமல்லாமல் அந்த பட குழுவினர் ஒத்துக் கொண்டால் அந்தப் பையன் நடிக்கின்ற படத்தில் நான் கெஸ்ட் ரோல் பண்ணலாம் என்று நினைக்கிறேன். படக்குழுவினர் விரும்பும் டான்ஸ், சண்டை போன்ற காட்சிகளில் நடிக்கலாம் என நினைக்கிறேன்.




விஜயகாந்த் சார் எத்தனையோ ஹீரோக்களை வளர்த்து விட்டவர். அவர் பையன் வளர்ந்து வருவதை நாம பார்க்க வேண்டும். அப்போதுதான், விஜயகாந்த் அண்ணா ஆத்மா சாந்தி அடையும் என நான் நம்புகிறேன். அது மட்டுமல்லாமல் யாராவது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தா சொல்லுங்கள். சண்முக பாண்டியன் தம்பியும், நானும் சேர்ந்து நடிக்கும் கதையாக இருந்தால் சொல்லுங்கள். நான் சேர்ந்து பண்ண ரெடியாக இருக்கிறேன். அந்த குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


நல்ல விஷயம்தான்.. விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே அவரால் வளர்ந்தவர்கள் இதைச் செய்திருக்க வேண்டும்.. இப்போது மறைந்த பிறகாவது செய்தால்தான் அவர்கள் உண்மையிலேயே நன்றுக்குரியவர்கள்.. பார்க்கலாம்.. என்ன செய்கிறார்கள் என்று.