நண்பர்களே.. "ராயன்" படத்துல  நடிப்பு மட்டும்தான்.. ஸ்கிரிப்ட்டெல்லாம் எழுதலை.. செல்வராகவன் விளக்கம்!

Su.tha Arivalagan
Feb 21, 2024,10:34 AM IST

சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ராயன் படத்தில் நான் நடிக்க மட்டுமே செய்கிறேன். சில பேர் சொல்வது போல ஸ்கிரிப்டெல்லாம் எழுதவில்லை என்று இயக்குநரும், இப்போது நடிகருமாகியும் உள்ள செல்வராகவன் கூறியுள்ளார்.


இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள்தான் செல்வராகவனும், தனுஷும். அப்பா வழியில் செல்வராகவன் இயக்குநரானார். தனது தம்பி தனுஷையே நாயகனாக வைத்து இயக்குநராக அவதாரம் எடுத்தார். இயக்கத்தில் புதிய பாணியை உருவாக்கியவர் செல்வராகவன். அவரது படமாக்கமும், கதை சொல்லும் விதமும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளன.




இந்த நிலையில் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார் செல்வராகவன். அவரது நடிப்பில் ஹீரோவாகவும், வித்தியாசமான பாத்திரங்களிலும் அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது தம்பி தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இது தனுஷின் 50வது படமாகும்.


ராயன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் செல்வராகவனும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர். பவர் பாண்டி படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.




இந்த நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை செல்வராகவன்தான் கவனிப்பதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் அதை செல்வராகவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நண்பர்களே, டி50 ராயன் படத்தின் ஸ்கிரிப்ட்டை நான் எழுதியுள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ராயன் ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் நான் சம்பந்தப்படவில்லை.  அது முழுக்கமுழுக்க தனுஷின் கனவு ஸ்கிரிப்ட். அதை இப்போது படமாக மாற்றுகிறார். நான் அதில் ஒரு நடிகனாக மட்டுமே பங்கு பெறுகிறேன்.


உங்கள் எல்லோரையும் போலவே, நானும் ராயன் படத்தை தியேட்டரில் காண காத்திருக்கிறேன். அவரது அர்ப்பணிப்புக்காகவும், கடும் உழைப்புக்காகவும், எனது தம்பியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் செல்வராகவன்.