"என் படம் பார்க்க யாரும் வரலை.. தற்கொலை செய்யப் போறேன்".. அதிர வைத்த தயாரிப்பாளர்

Meenakshi
Oct 18, 2023,04:37 PM IST

சென்னை: இயக்குநரும், நடிகருமான எல்.வி.சுரேஷ் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி வீடியோ போட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார். அவரது வீடியோ திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை தந்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் நடிகர்களை விட தோல்வியை தழுவி நொடித்துப் போனவர்கள் ஏராளம். வென்றவர்களை விட தோற்றவர்களே அதிகம். 




பூ போன்ற காதல் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தவர் எல்.வி.சுரேஷ். இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் சரியாக வராத காரணத்தினால், தான் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், ரசிகர்கள் வராவிட்டால் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் வீடியோ போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குமுறிக் குமுறி அவர் அழுதபடி போட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:


என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க. இந்த படத்த முடிச்சு சென்சார் சட்டிவிகேட் வாங்க 5 லட்ச ரூபா கடன் வாங்கியிருந்தேன். கடன் பிரச்சனை எனக்கு ரொம்ப இருக்கு. இந்த படத்தை நம்பி தானே இருந்தேன். ஆனா ஒரு 20 ரூபாய் டிக்கெட் கூட வர மாட்டேங்குது. இப்படியே போன நா கண்டிப்பா உயிர் வாழ முடியாது.


எனக்கு நிறைய பேர் கடன் கொடுத்திருக்காங்க அவங்களுக்கு எல்லாம் நன்றி. நாளைக்கு நா கண்டிப்பா உயிரோட இருக்கமாட்டேன். நா சாகுறதுக்கு முன்னாடி இந்த நியூசை சானல்ல போட்டிங்கன்னா எப்படியாவது 100 பேர் இந்த படத்த பாக்க வருவாங்க. அப்பத்தான் பிரச்சினை கொஞ்சமாச்சும் தீரும். 


போடுவீங்கனு நம்புறேன். அப்படி இல்லாட்டி செத்ததுக்கு அப்புறம் போடுங்க. சாரி என்னால நிறைய பேர கஷ்டப்படுத்திட்டேன். இனிமே யாரும் சொந்தமா படம் எடுக்காதீங்க. பணம் நிறையா இருந்தா எடுங்க என்று அழுது கொண்டே கூறியுள்ளளார்.


தற்பொழுது, சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிலை இதுவாக உள்ளது எனவும் இதனால் திரைத்துறையும் ரசிகர்களும் சிறுபட்ஜெட் படங்களைப் புறக்கணிக்காமல் ஆதரவு தர வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. கடன் தொல்லை, படம் சரியாக போகவில்லை  என்பதற்காக தற்கொலை என்பதெல்லாம் மிக மிக தவறான முடிவு.. சுரேஷைத் தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.