நான் 2வது கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. பவன் கல்யாண் மாஜி மனைவி தகவல்!

Su.tha Arivalagan
Jun 11, 2024,06:11 PM IST

ஹைதராபாத்: ஆந்திராவில் புது அலையைப் பரப்பிக் கொண்டிருக்கும், ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான நடிகை ரேணு தேசாய்,  தான் மறுமணம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.


பவன் கல்யாணுக்கு மொத்தம் 3 மனைவிகள். முதல் மனைவி பெயர் நந்தினி. இவரை விவாகரத்து செய்து விட்டுத்தான் ரேணு தேசாயை மணந்தார். கல்யாணத்திற்கு முன்பு சில வருடங்கள் இருவரும் லிவ் இன் உறவில் இருந்தனர். இந்தத் திருமணத்தின் மூலம் பவன் கல்யாணுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். அதன் பின்னர் ரேணு தேசாயிடமிருந்து விவாகரத்து பெற்ற பவன் கல்யாண், 3வதாக அன்னா என்ற ரஷ்யப் பெண்ணை மணந்தார். அவர் மூலம் இரண்டு குழந்தைகள் பவன் கல்யாணுக்கு உள்ளனர்.




விவாகரத்து ஆனாலும் கூட பவன் கல்யாணும்- ரேணு தேசாயும் நண்பர்களாகத்தான் பழகி வருகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட இவர்களது மகன் அகிரா நந்தன் தனது தந்தையுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ரேணு தேசாய் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் மீண்டும் திருமணம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.


சமீபத்தில் ஒரு யூடியூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்துப் பேசியுள்ளார். ரேணு தேசாய் கூறுகையில், எனது பிள்ளைகள் என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளக் கூறுகின்றனர். நானும் பண்ணிக் கொள்ளலாம்னு இருக்கேன். இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இது நடக்கலாம். பிள்ளைகள் சிறு வயதில் இருந்தபோது அவர்களுக்கு கேர் தேவைப்பட்டது. நமது உதவி அவர்களுக்குத் தேவை. அந்த வயதில் நாம் திருமணம் செய்திருந்தால், அவர்களுக்கு அது பாதிப்பை தந்திருக்கும். நாம் கணவருடன்தான் அதிக நேரம் செலவிட வேண்டியதிருந்திருக்கும். குழந்தைகள் தனித்து விடப்பட்டிருப்பார்கள். அதை நான் அப்போது விரும்பவில்லை.


ஏற்கனவே அப்பா உடன் இல்லாமல் குழந்தைகள் நிறைய கஷ்டப்பட்டு விட்டார்கள். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். கல்லூரிக்குப் போக ஆரம்பித்து விட்டார்கள். புதிய உலகத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நண்பர்கள் நிறைய வந்து விட்டார்கள். அவர்களுடன் நிறைய நேரம் செலவிடுகிறார்கள். இப்போது அவர்கள் அப்பா, அம்மாவை நம்பி இல்லை. தேவைப்பட்டால் மட்டும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தால் போதும். எப்போதும் கூடவே இருக்க வேண்டியதில்லை.




எனது பிள்ளைகளும் இப்போது என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். எனக்கும் அது சரி என்றே படுகிறது என்று கூறியுள்ளார் ரேணுகா தேசாய். மேலும் தனது மகன் அகிரா நந்தன் , டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


ரேணு தேசாய் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா, பார்த்திபன் ஆகியோருடன் இணைந்து ஜேம்ஸ் பாண்டு என்ற படத்தில் நடித்திருப்பார். பவன் கல்யாண் தற்போது அரசியலில் பிரகாசிக்க ஆரம்பிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அவரது முன்னாள் மனைவியும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்த இன்னிங்ஸுக்கு ஆயத்தமாகப் போவதாக கூறியிருப்பது அவரது நலம் விரும்பிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.