புஷ்பா 2 - நெரிசலில் பெண் பலியான விவகாரம்.. தியேட்டர் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது!

Meenakshi
Dec 09, 2024,02:12 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா 2  படம் பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் உயிரிழந்த நிலையில், தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வெற்றி நடைபோட்டு வருகிறது புஷ்பா 2. சுமா் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் ஸ்ரீலீலா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 5ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்டமொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததோடு, வசூலையும் வாரி குவித்த நிலையில், தற்போது புஷ்பா 2வும் வசூல் மழையை பொழிகிறது.  படம் வெளியான 3 நாட்களில் மட்டும் ரூ.621 கோடியை வசூலித்து உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.




இந்நிலையில்,தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையங்கில் புஷ்பா2 படத்தின் முதல் காட்சியை பார்க்க அதிகாலையில் குடும்பத்துடன் சென்ற ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ரேவதி என்பவர் உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தெலுங்கானாவில் இனிமேல் எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்தது.


பெண் உயிரிழந்தது குறித்து ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர் சந்தீப், மேலாளர் நாகராஜூ, பால்கனி பொறுப்பாளர் ஸ்ரீகந்தகம் விஜய்சந்தர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.


ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்திருந்த நடிகர் அல்லு அர்ஜூன், பலியான ரேவதியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்