தென்னிந்தியாவுக்கு போகலாம் என கூறி விட்டு.. அயோத்திக்கு அழைத்துப் போன கணவர்.. டைவர்ஸ் கேட்கும் மனைவி

Su.tha Arivalagan
Jan 25, 2024,05:17 PM IST

போபால்: கோவாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் தேனிலவுக்கு கூட்டிப் போவதாக கூறிய கணவர், அவரது அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு அயோத்திக்குக் கூட்டிப் போனதால் கோபமடைந்த மனைவி, விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருப்பது மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார்.  மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் ஐடி துறையில் பணியாற்றி வருகிறாராம். அந்தப் பெண்ணும் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கிறார். அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நானும் எனது கணவரும் நல்ல சம்பளம் வாங்கி வசதியாக இருக்கிறோம். 


வெளிநாட்டுக்குக் கூட ஹனிமூன் போயிருக்கலாம். ஆனால் எனது கணவருக்கு வெளிநாட்டுக்குப் போக விருப்பமில்லை. இந்தியாவுக்குள்தான் போக வேண்டும் என்று கூறி வந்தார்.  இதையடுத்து நான் கோவா மற்றும் தென்னிந்தியாவுக்குக் கூட்டிப் போனால் போதும் என்று அவரிடம் கூறியிருந்தேன். அவரும் சரி என்று கூறியிருந்தார்.




ஆனால் என்னிடம் சொல்லாமல் திடீரென அவர் அயோத்திக்கும், வாரணாசிக்கும் விமான டிக்கெட் போட்டார். மேலும் தனது தாயாரின் ஆசைப்படி அயோத்திக்குப் போகலாம் என்றும் அவர்  என்னிடம் கூறியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். இருந்தாலும் நான் பிரச்சினை செய்யவில்லை. அவர்களது விருப்பபடியே அவர்களுடன் சென்றேன். எனது கணவர் என்னை விட அவரது குடும்பத்தினர் மீதுதான் அதிக அக்கறை காட்டுகிறார். அவருடன் வாழ முடியாது என்று கோரியுள்ளார் அந்தப் பெண்.


அயோத்திக்கும், வாரணாசிக்கும் போய் வந்த பிறகு இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார் அப்பெண். தற்போது கணவன் - மனைவிக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் கவுன்சலிங் தரப்பட்டு வருகிறதாம்.


அட ராமா.. இப்படியெல்லாமா பிரச்சினை வரும்!