சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்.. கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக ஆதாரம் இல்லை.. விடுதலை!

Aadmika
Aug 10, 2024,01:04 PM IST

சென்னை : சின்னத்திரை நடிகை விஜே சித்ரா மரண வழக்கில், அவரது கணவர் ஹேமநாத்தை விடுவித்து திருவள்ளூர் மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. 


விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் குடும்ப சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் விஜே சித்ரா. இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் ஏராளம். இது போல சில சீரியல்கள், வெப் சீரிஸ், படம் போன்றவற்றிலும் சித்ரா நடித்து வந்தார். இந்நிலையில் 2020ம் ஆண்டு தனது கணவருடன் சென்னைக்கு அருகே உள்ள நாசரேத்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த சித்ரா, குளியல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். 




ஆரம்பத்தில் சித்ரா, தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து இது கொலை வழக்காக மாற்றப்பட்டு, ஹேம்நாத் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்தது.


இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் அவர் இந்த வழக்கில் இருந்து விடுத்துள்ளது. இதனால் சித்ராவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத மர்மமாகவே உள்ளது.