இன்ஸ்டாகிராம் காதலனை மணந்த மனைவி.. கொந்தளித்துக் கொதித்த கணவன்.. குழவிக்கல்லை எடுத்து..!

Meenakshi
May 14, 2024,02:13 PM IST

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் மனைவி இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் குழவிக்கல்லால் அவரைத் தாக்கினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்க நாள் அதிகரித்கொண்டே தான் உள்ளது. இந்த பக்கங்களை பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் ஏற்பட்டாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இதை மறுக்க முடியாது. அப்படித்தான் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு வயது 47. இவரது மனைவி கடந்த சில நாட்களாகவே அதிகமாக மொபைல் போன் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,அவரது மனைவிக்கும் மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. இது அந்த கூலி தொழிலாளிக்கு தெரியாமல் இருந்துள்ளது. 




அந்த பெண் உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அடிக்கடி மதுரை வந்து கள்ள காதலனை சந்தித்து பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்தில் போய் முடிந்துள்ளது.  இருவரும் செய்து கொண்ட திருமண புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பரவி வந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


இந்தநிலையில், மதுரை சென்று ஒரு வாரம் தங்கி இருந்த அந்த பெண் வீடு திரும்பியுள்ளார். அப்போது இது குறித்து அந்த பெண்ணின் கணவர் அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் கணவர் குழவிக்கல்லால் கடுமையாக அப்பெண்ணை தாக்கினார். இதில் அப்பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. 


அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு, ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அப்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் இதே போன்று மனைவி அடிக்கடி வீடியோ காலில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர், அவரது கையை அரிவாள்மனையால் வெட்டிய கொடூர சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.