6 மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம்..பிரியாணி கரண்டியால் அடித்து..ராத்திரி நேரத்தில் நடந்த விபரீதம்!

Meenakshi
Mar 12, 2024,12:23 PM IST

சென்னை: சென்னை அயனாவரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக, மனைவியை பிரியாணி கரண்டியால் தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.


சென்னை அயனாவரம் வசந்த் கார்டன் பகுதியை சேர்ந்தவர் உமர். வயது 37. இவருக்கும் 36 வயதுடைய சையது அலி பாத்திமா என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. கல்யாணம் ஆனது முதலே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை போல அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.




10ம் தேதியும் இருவருக்கும் இடையே இரவு நேரத்தில் சண்டை மூண்டுள்ளது. வாய்த்தகராறாக ஆரம்பித்த சண்டை உச்சத்திற்கு போய் அடிதடியாக மாறியது. கோபமடைந்த உமர், ஆத்திரத்தில் வீட்டில் வைத்திருந்த இரும்பு பிரியாணி கரண்டியை எடுத்து மனைவியை கடுமையாகத் தாக்கி விட்டார்.


இரும்புக் கரண்டி என்பதால் பாத்திமா கடும் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பாத்திமாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாத்திமா இன்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.


பாத்திமாவின் தாய் பல்கீஸ் பீவி அயனாவரம் போலீசில் மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன் பேரில் உமர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவாகியுள்ளது. 


புருஷன் பொண்டாட்டி சண்டை இயல்புதான்.. அதற்காக இப்படியா கண்மூடித்தனமாக நடந்து கொள்வது.. சண்டை வருதா, வாக்குவாதம் வருதா.. கோபம் வருதா.. யாராவது ஒருவர் அமைதி ஆயிடுங்க.. கோபம் வரும் போகும், ஆத்திரம் வரும் போகும்.. ஆனால் உயிர்.. ??