அடிக்கடி வீடியோ கால்.. மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவர்.. அடுத்து அவர் செய்த காரியம்!

Meenakshi
Apr 27, 2024,12:42 PM IST
வேலூர்: மனைவி அடிக்கடி வீடியோ காலில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர், அவரது கையை அரிவாள்மனையால் வெட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

செல்போனுக்கு பலர் இன்று மோசமான முறையில் அடிமையாகிக் கிடக்கின்றனர். செல்லை நோண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள் பலரும். யூடியூப் பார்ப்பது, ரீல்ஸ் பார்ப்பது, பாட்டுக் கேட்பது என்று பலரும் மயங்கிப் போய் உள்ளனர். அதிலும் இந்த ரீல்ஸ் மோகம் பலரையும் பிடித்து ஆட்டுகிறது. முன்பெல்லாம் சின்னப் பசங்கதான் செய்வார்கள். ஆனால் இன்றோ படுத்த படுக்கையாக கிடக்கும் பாட்டிகளைக் கூட தூக்கிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி லைக்ஸ் அள்ளுகின்றனர். பாட்டிகளும் ஜாலியாகத்தான் ரீல்ஸ் பண்ணுகிறார்கள்.

பொழுது போக்குகள்.. அந்த அளவில் இருந்தால் நல்லது.. அதைத் தாண்டும்போதுதான் விபரீதங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு விபரீதம்தான் இப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.



குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்தவர் சேகர். நெசவுத்தொழிலாளியான இவருக்கு வயது 42. இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் இருவருக்கு திருமணம் முடிந்த நிலையில், ஒரு மகள் மட்டும் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரேவதி சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்டும், அதிக  நேரம் வீடியோ காலில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. கணவன் சேகரன் அதிக நேரம் பேசுவது குறித்து ரேவதியை கண்டித்துள்ளார். இதனிடையே ரேவதி மீண்டும் வீடியோ காலில் பேசியதை பார்த்த சேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சேகர், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் ரேவதியின் வலது கையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரேவதி கதறி துடித்துள்ளார்.  அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் சேகரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போன் பேசிய மனைவியின் கையை வெட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.