"எங்கள் எய்ம்ஸ் எங்கே?"..  சு. வெங்கடேசன் தலைமையில்.. மதுரையில் போராட்டம்

Su.tha Arivalagan
Jan 24, 2023,11:07 AM IST
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தலைமையில் இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேட்டு இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.  45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.

இதையே பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி ஒரு செங்கல்லைக் காட்டி பிரசாரம் செய்து அதிர வைத்தார். இது திமுகவின் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பேருதவியாக அமைந்தது.

இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதில் நிலவும் தாமதத்தைத் தொடர்ந்து கண்டித்து வரும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியாவிலேயே தாங்கள் படித்த கல்லூரி எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் படிப்பையே முடிக்கப் போகும் முதல் கல்லூரி மதுரை எய்ம்ஸ் கல்லூரிதான் என்று தகண்டனம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து "எங்கள் எய்ம்ஸ் எங்கே?" என்ற கேள்வியுடன்  "பெருந்திரள் தொடர் முழக்கப்போராட்டம்" என்று மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது.  திமுக கூட்டணிக் கட்சியினர் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.  கம்யூனிஸ்ட் தலைவர்கள், திமுக தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சியினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் கையில் ஒற்றைச் செங்கல்லை வைத்துக் கொண்டு முழக்கமிட்டபடி போராட்டத்தில் முழக்கமிட்டனர்.