பொலபொலவென சரிந்த மலை.. நிமிடத்தில் தரைமட்டமான மின் நிலையம்.. சிக்கிம் ஷாக்!

Su.tha Arivalagan
Aug 20, 2024,05:32 PM IST

குவஹாத்தி: சிக்கிமில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் அங்குள்ள மின்சார நிலையம் ஒன்று நொடிப் பொழுதில் தரைமட்டமாகி மண்ணோடு புதைந்து போனது.


மலைப் பகுதிகளை சுரண்டி சுரண்டி எடுத்து இப்போது அவை பலவீனமடைந்து சரிந்து  வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் அனைவரையும் அதிர வைத்தன. சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு அனைவரையும் வியர்க்க வைத்தது. 




இந்த நிலையில் சிக்கிமில் இன்று காலை நடந்த மிகப் பெரிய நிலச்சரிவு அனைவரையும் பதற வைத்துள்ளது. அங்குள்ள டீஸ்டா 5 அணை பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி அங்குள்ள மின்சார உற்பத்தி நிலையம் தரைமட்டமானது. சில நாட்களுக்கு முன்பாகவே இங்கு தொடர்ந்து லேசான நிலச்சரிவுகள் நடந்து வந்தன. இதையடுத்து மின் நிலையம் காலி செய்யப்பட்டது. அங்கிருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


இந்த நிலையில்தான் இன்று காலை மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு மின் நிலையம் தரைமட்டமானது. ஒரு பெரிய மலைப் பகுதியே அப்படியே சரிந்து விழுந்தது. பார்க்கவே அச்சமூட்டும் வகையில் இந்த நிலச்சரிவு இருந்தது. நல்ல வேளையாக யாரும் அந்தப் பகுதியில் இல்லாததால் உயிரிழப்போ, காயமோ இல்லை. 


இந்த அணையானது கடந்த 2023ம் ஆண்டு முதலே செயலிழந்து கிடக்கிறது. அப்போது ஏற்பட்ட மிகப் பெரிய பேய் மழை மற்றும் நிலச்சரிவால் இந்த அணையானது செயலிழந்தது. சிக்கிம் மாநிலத்திலேயே மிகப் பெரிய நீர் மின்சாரத் திட்டம் இந்த டீஸ்டா அணைத் திட்டமாகும். பேய் மழை காரணமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் அணைப் பகுதியில் பல இடங்கள் நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு விட்டன என்பது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்