மாதவிடாய் காலத்தில்.. அடி வயிற்றில்.. "சுரீர்"னு வலிக்குதா.. கவலைப்படாதீங்க.. முதல்ல இத படிங்க..!

Manjula Devi
Feb 06, 2024,05:24 PM IST

சென்னை: உலகிலேயே பெண்கள்தான் மிகவும் மன உறுதியானவர்கள், வலிமையானவர்கள் என்று சொல்வார்கள்.. காரணம் அவர்களைப் போல வலிகளைத் தாங்குவது வேறு யாரும் கிடையாது. அதனால்தான் சவால்களை சந்திப்பதிலும்,  சந்தித்து வெற்றி காண்பதிலும் பெண்கள் சிறந்தவர்களாக இருக்க முடிகிறது.


எத்தனை வலி வந்தாலும் அதைத் தாங்கும் சக்தி பெண்களுக்கு மட்டுமே இயற்கை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்தும் வரை தான் சுதந்திரமாக, நிம்மதியாக இருக்க முடிகிறது. பூப்பெய்திய பிறகு அந்தப் பெண் கடைசி வரை சந்திக்கும் மிகப் பெரிய கொடுமை.. மாதா மாதம் வரும் மாதவிடாய் வலி.




அந்த சமயத்தில் பெண்கள் சந்திக்கும் கஷ்டங்களை சொல்லில் வடிக்க முடியாது. அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டுதான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள், எல்லாவற்றையும் செய்கிறார்கள், வேலைகளையும் பார்க்கிறார்கள்.


பிரசவ வலி கூட ஒருமுறைதான் வரும்.. ஆனால் இந்த மாதவிடாய் வலி மாதா மாதம் வரும் அவஸ்தை. மாதவிடாய் காலத்தில் பலருக்கும் அடி வயிற்றில் தீவிர வழி ஏற்படும். சுருண்டு படுத்துக் கொள்வார்கள். இதற்கெல்லாம் மருத்துவரிடமும் ஓட முடியாது. இப்படிப்பட்ட நேரத்தில் கை மருந்துகள்தான் கை கொடுக்கும். அதுக்குத்தான் சில டிப்ஸ்.


ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு காரணமாக பெண்களுக்கு அடி வயிற்றில் அதீத வலி ஏற்படுகிறது.  சிலருக்கு வாந்தி, குமட்டல் போன்றவையும் ஏற்படும் .  அந்த நேரங்களில் தங்களின் வேலைகளை சரியாக செய்ய முடியாமலும், சரியாக சாப்பிட முடியாமலும் பெண்கள் அவதிக்குள்ளாவார்கள். 


இந்த சமயத்தில் எரிச்சல் அதிகமாகும், கோபம் அதிகமாக இருக்கும்.  இதுபோன்ற மனநிலை மாற்றங்களோடு வலியும் கூட சேரும்போது நரக வேதனையாக அது இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் வழியைக் குறைப்பதற்காக சிறந்த வழிமுறைகள் உள்ளன. வாங்க பார்ப்போம்.




நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் வைத்து அடிவயிற்றில் மெல்ல மசாஜ் செய்யலாம். இதுபோல செய்யும்போது உஷ்ணம் வெளியேறி, சற்று வலி குறைந்து சற்று நிவாரணம் கிடைக்கும். முழுமையாக வலி நிற்காவிட்டாலும் கூட  ஓரளவுக்கு தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலி மட்டுப்படலாம்.


கொய்யா இலைகளும் இந்த வலியின் போது நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். கொஞ்சம் இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைங்க. பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொண்டு, காலை, மாலை என இரு நேரம் மட்டும் குடிக்கலாம். இது சற்று வலியைப் போக்க உதவும்.


அடி வயிறு அதீதமாக வலிக்கும்போது சுடு தண்ணீரில் துணியை முக்கி, பிழிந்து மெதுவாக வலிக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இது சற்று நிவாரணம் தர உதவும். பொதுவாக எந்த வலியாக இருந்தாலும் இந்த சுடுதண்ணீர் ஒத்தடம் கை கொடுக்கும். இதை செய்து பார்க்கலாம்.


கொஞ்சம் பூண்டை எடுத்து உரித்து, அத்தோடு பெருஞ்சீரகத்தையும் சேர்த்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி அதை குடித்து வந்தாலும் வலியிலிருந்து சற்று நிவாரணம் பெற உதவும்.




மாதவிடாய்க் காலத்தில் நிறைய இரும்புச் சத்து இழப்பு ஏற்படும், கால்சியம் இழப்பும் ஏற்படும். எனவே சத்தான பழங்கள், நட்ஸ் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது.  குறிப்பாக காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். கீரை சாப்பிடலாம், ரொம்ப நல்லது.


எல்லாவற்றுக்கும் மருந்தைத் தேடக் கூடாது.. உணவுதான் பெரும்பாலும் நல்ல மருந்து. அதை விட முக்கியமாக, மாதவிடாய்க் காலத்தில் வீட்டில் இருக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மனைவியோ, சகோதரிகளோ, இதுபோன்ற சமயத்தில் வலியில் சிரமப்படும்போது அவர்களது வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டு உதவிக் கரம் நீட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆத்மார்த்தமான உதவியே, பெண்களுக்கு நிறைய தெம்பு கொடுத்து அவர்களுக்கு மேலும் மன வலிமையைக் கொடுத்து வலியை மறக்க உதவும்.


எச்சரிக்கை: நாட்டு மருந்துகள், கை வைத்தியம் போன்றவற்றை கடைப்பிடிக்கும்போது உரிய மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பிறகு அதை பின்பற்ற வேண்டும்.