Indian 2: இந்தியன் தாத்தாவால் 100 ஆண்டைக் கடந்து வாழ முடிந்தது எப்படி?.. திருமூலர் பார்முலா இதுதான்!

Su.tha Arivalagan
Jul 11, 2024,06:54 PM IST

சென்னை: இந்தியன் தாத்தாவைப் பற்றி முதல் இந்தியன் வந்தபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இப்போதோ இந்தியன் தாத்தாவின் வயது குறித்த ஆச்சரியமும், கேள்விகளும் சரமாரியாக வந்து போய்க் கொண்டுள்ளன.


எல்லோருக்கும் இப்படி ஒரு கேள்வி எழும் என்பதால்தான் படத்திலேயே அதற்கான ஒரு விளக்கத்தையும் வைத்து விட்டார் ஷங்கர். கூடவே  டேக் டைவர்ஷன் என்பது போல, திருமூலர் பக்கம் கையைக் காட்டி விட்டு போய் விட்டார். இனி இந்தியன் தாத்தாவின் வயது குறித்த சந்தேகம் வந்தால் திருமூலரிடமே நாம் ரெபரன்ஸ் எடுத்துக்கலாம்.. ஷங்கரே கூட அங்கிருந்துதான் ரெபரன்ஸ் எடுத்து இந்தியன் தாத்தாவின் வயதை நிர்ணயித்துள்ளார் என்பதும் நமக்குப் புலனாகிறது.




இந்தியன் 2 நாளை கோலாகலமாக வெளியாகவுள்ளது. இதில் மீண்டும் சேனாபதியின் அதிரடி அதகளம் கலக்கலாக இடம் பெற்றுள்ளது. இதில் கமல்ஹாசனின் தோற்றம்தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. உண்மையில் பார்த்தால் இந்தியன் தாத்தாவுக்கு இப்போது வயது 100ஐத் தாண்டி விட்டது. அப்படி இருக்கும்போது எப்படி 100 வயதைக் கடந்த வரால் பாய்ந்து பாய்ந்து சண்டை போட முடியும் என்ற கேள்விகள் இயல்பாகவே எழும். அறிவியல் புரிந்தவர்களுக்கு நிச்சயம் இந்த கேள்வி வரும், லாஜிக் பார்க்கவே செய்வார்கள்.


அதற்கான விளக்கத்தைத்தான் நேற்று வெளியான டீசரில் வைத்திருந்தார் ஷங்கர். அதன்படி சேனாபதி சாதாரண ஆள் இல்லை. திருமூலர் எழுதிய திருமந்திரம் எல்லாம் கற்றுத் தேர்ந்தவர்.  எனவே அவர் நீண்ட நாள் வாழக் கூடிய வித்தைகள் அறிந்து வைத்திருப்பவர் என்று பாபி சிம்ஹா சொல்வது போல உள்ளது.


அப்படி என்ன வித்தைகளை திருமந்திரத்தில் திருமூலர் சொல்லியுள்ளார் என்று பார்த்தால் ஒரு குறிப்பிட்ட திருமந்திர பாடல் நமது கண்ணில் பட்டது. அது இதுதான்.


திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ள 479வது பாடலாகும் இது.


"பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்

பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே"


அதாவது திருமூலர் என்ன சொல்கிறார் என்றால், பெண்ணும், ஆணும் உடல் ரீதியாக கலந்த பிறகு பெண்ணின் கருப்பையில் விந்தணு கலந்த பின்னர், ஆண் விடும் மூச்சுக் காற்றின் அளவானது 5 விநாடி அளவுக்கு வெளியானால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் காலம் 100 ஆக இருக்குமாம்.  அதுவே நான்கு விநாடியாக இருந்தால் குழந்தையின் ஆயுள் காலம் 80 ஆண்டுகளாக இருக்குமாம்.  இப்படி பாய்ந்து செல்லும் காற்றின் அளவை பகுத்தறிந்து, அதைக் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டால் ஒரு உயிரின் ஆயுள் காலத்தையும் நம்மால் நிர்ணயிக்க முடியும். அந்த வித்தை யோகிகளுக்கு கை வரப் பெற்றது என்று சொல்கிறார் திருமூலர்.


இந்த விஷயத்தையே இயக்குநர் ஷங்கர், உதாரணமாக எடுத்துக் கொண்டு இந்தியன் தாத்தாவின் வயதை நிர்ணயித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபோக ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 100 வயதைக் கடந்த பலர் தற்காப்புக் கலைகளில் கலக்கிய வரலாறுகளும் உண்டு. இவற்றையும் கூட ஷங்கர் தனது கிரியேஷனுக்கு துணைக்கு அழைத்திருக்கிறார் என்பதால் படத்தில் இந்தியன் தாத்தா அதிரடி காட்டும் காட்சிகளில் லாஜிக் குறைபாடு பெரிதாக இருக்காது, தெரியாது என்பது ஷங்கரின் நம்பிக்கை.


இதையெல்லாம் பார்க்கும்போது, என்னென்னவோ செஞ்சு வித்தைகளை வரிசைப்படுத்தியிருக்கிறார் ஷங்கர் என்று மட்டும் தெரிகிறது.. இப்பவே கூஸ்பம்ப்ஸ் ஆகுதே.. படம் எப்படியெல்லாம் மாஜிக் காட்டப் போகுதோ.. பார்ப்போம்.