War will Kill all: பாலஸ்தீனியர்களுக்கு வேலை கொடுத்தவரின் மகளைக் கொன்ற ஹமாஸ்!

Su.tha Arivalagan
Oct 15, 2023,04:46 PM IST

டெல் அவிவ்: போர் மோசமானது.. அது இரு பக்கமும் கூரிய கத்தி போன்றது. பிடிக்கும் அத்தனை பேரையும் அது அறுக்கத் தவறாது.. இப்படிப்பட்ட மோசமான ஒரு போரில்தான் இஸ்ரேலும் சரி, ஹமாஸும் சரி இறங்கியுள்ளன.


உலக அளவில் மிகவும் மோசமான போர்களில் ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன போர்.. பல  வருடங்களாக, பல கட்டங்களாக பல குழுக்களுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல். இந்த போரின் விளைவு இதுவரை பல லட்சம் உயிர்கள் பறி போனதுதான்.. ரத்தம் சிந்தி சிந்தி அந்த பூமியே கறை படிந்து போய் விட்டது.


மண்ணுக்காக நடக்கும் இப்போரின் கொடுமை என்னவென்றால் பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்போரும் கூட போரில் சிக்கி பலியாகும் பரிதாபம்தான்.. அப்படி ஒரு கொடுமையான சம்பவம் இப்போதைய இஸ்ரேல் - ஹமாஸ் மோதலிலும் அரங்கேறியுள்ளது.





பாலஸ்தீன மக்களுக்காக, காஸா மக்களுக்காக, மேற்கு கரை மக்களுக்காக குரல் கொடுத்து வந்த பலரும் கூட இந்த போரில் உயிரிழந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரின் மகள்தான் இளம் பெண் டேணியல்.


கம்ப்யூட்டர் நெட்வொர்க் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மெல்லநோக்ஸின் நிறுவனர் எயால் வால்ட்மேனின் மகள்தான் டேணியல். ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நோவா இசை விழாவில் கண் மண் தெரியாமல் தாக்குதல் நடத்தினார்கள் அல்லவா.. அப்போது பரிதாபமாக உயிரிழந்த அப்பாவி பொதுமக்களில் டேணியலும் ஒருவர்.


டேணியலின் தந்தை வால்ட்மேன் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸாவில் தனது நிறுவனங்களின் கிளைகளைத் தொடங்கி நடத்தி வந்தார். அதில் பாலஸ்தீனியர்களுக்கு அதிக அளவில் வேலை  கொடுத்துள்ளார்.  இவரது நிறுவனங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலனடைந்துள்ளனர்.


வால்ட்மேனின் மகளான 24 வயது டேணியல் தனது பார்ட்னர் நோவாமுடன் தெற்கு இஸ்ரேலில் நடந்து வந்த நோவா இசை விழாவில் கலந்து கொண்டிருந்தார். அப்போதுதான் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். உள்ளே புகுந்து இஸ்ரேலியல்களை கண் மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.


தனது மகள் குறித்து வால்ட்மேன் கூறுகையில், எனது மகள் எப்படியாவது வந்து விடுவாள் என்று நம்பிக்கையோடு இரு்நதேன். மீண்டும் அவளைப் பார்க்க முடியும் என்று நம்பினேன்.  பிணைக் கைதிகளில் ஒருவராகக் கூட அவர் போயிருக்கலாம்..  ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.


எனது மகள் கையில் ஆப்பிள் வாட்ச் கட்டியிருந்தார். அதை டிராக் செய்ய முடியும். நான் இஸ்ரேல் வந்து சேர்ந்த சில மணி நேரங்களில் தெற்கு இஸ்ரேலில் விழா நடந்த பகுதியில் போய்த் தேடிப் பார்த்தபோது அவரது கைக்கடிகாரத்தை வைத்துத்தான் எனது மகள் உடல் கிடந்த இடத்தை டிராக் செய்ய முடிந்தது.


எனது மகள் பயணம் செய்த கார் அங்கு குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கிடந்தது. பலரும் சூழ்ந்து அந்தக் காரை சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இரண்டு, மூன்று கோணங்களில் இருந்து சுடப்பட்டுள்ளனர் காரில் இருந்தவர்கள்.


கடைசி முறை எனது மகளுடன் பேசியபோது தனது பார்ட்னரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் இன்று இருவரையும் ஒன்றாக அடக்கம் செய்யும் நிலை எங்களுக்கு ஏற்பட்டு விட்டது.




எனது மகளை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோரின் அன்பையும் பெற்றவள் எனது மகள். அவளைப் பிரிந்திருப்பது வேதனையாக இருக்கிறது என்றார் வால்ட்மேன்.


போர் மோசமானது... நல்லவர்கள், கெட்டவர்கள் என்று அதற்கு பாரபட்சம் கிடையாது.. மிகவும் மோசமானது.. அன்பு மட்டுமே நிலைத்திருக்கும்.. அன்பும், அமைதியும்  அந்தப் பூமியில் எப்போது நிரந்தரமாகிறதோ அப்போதுதான் இதுபோன்ற கண்ணீர்க் கதைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.. அதுவரை தொடரும்!