தால் ஏரியில் பற்றி எரிந்த படகுகள்.. வேகமாக பரவிய தீயில் சிக்கி ஹவுஸ் போட்டுகள் நாசம்!

Su.tha Arivalagan
Nov 11, 2023,05:51 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள தால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹவுஸ் போட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பல படகுகள் நாசமாகின. ஒரு படகில் ஏற்பட்ட தீவிபத்தால் மற்ற படகுகளுக்கும் தீ பரவி இந்த சம்பவம் நடந்துள்ளது.


நேற்று இரவு தால் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹவுஸ் போட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயானது அருகில் இருந்த பிற ஹவுஸ் போட்டுகளுக்கும் பரவியது. இதையடுத்து ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகளும் பற்றி எரிய ஆரம்பித்தன.


இந்த படகுகள் தீப்பற்றி எரிந்ததைப் பார்க்கும்போது ஏரியே தீயில் எரிவது போல காட்சி அளித்தது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.




தீ எப்படி பரவியது என்று தெரியவில்லை. கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் அல்லது மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.