தமிழ்நாட்டில் மீண்டும் ..108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை.. வெயில் சுட்டெரிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்

Manjula Devi
May 27, 2024,06:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சில இடங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மே மாத தொடக்கத்தில் வெயில் அதிகரித்து வந்த நிலையில், பின்னர் தமிழ்நாட்டில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை  பெய்து , மக்களை மகிழ்வித்தது. இதனால் பூமியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இதற்கிடையே வங்க கடலில் உருவான ரெமல் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை வங்கதேசம் மற்றும் மேற்குவங்க கடற்கரை இடையே  கரையை கடந்தது.

இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது, தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழை அளவு குறைந்து தமிழ்நாட்டில் பரவலாக வெப்பம் அதிகரிக்க கூடும் என ஏற்கனவே அறிந்திருந்தனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் சுட்டெரிக்கும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் வடகடலோர மாவட்டங்களான ஆந்திராவை ஒட்டி உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் ஒரு சில இடங்களில் வெயில் அதிகரிக்கும். அப்போது 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும்.குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 108 டிகிரி பாரன்ஹீட்டை  தாண்டி வெயில் கொளுத்தும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவிலான பெருமழையை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளார்.