மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

Manjula Devi
Sep 18, 2024,06:41 PM IST

சென்னை:   வறண்ட வானிலை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் சில நாட்கள் வெப்பம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் முன்பு பரவலாக மழை கொட்டி தீர்த்தது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவக் காற்றின் தீவிரம் குறைந்துள்ளதோடு, அது திசை மாறிப் போய் விட்டதால், வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது கோடை காலத்தை மிஞ்சும் அளவிற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில்  வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் வெயில் தாக்கத்தால் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.


சென்னை - மதுரையில் வெளுக்கும் வெயில்




அந்த வரிசையில் நேற்று சென்னை, தஞ்சாவூர் அதிராம்பட்டினம், திருச்சி, வேலூர், தூத்துக்குடி, கரூர், உட்பட பத்து மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக நாட்டிலேயே  அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி ஃபாரன்ஹூட் வெயில் உச்சத்தை தொட்டது. அதேபோல் ஈரோட்டில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இது தவிர நாகப்பட்டினத்தில் 102.74, சென்னை மீனம்பாக்கத்தில் 102.56, பாளையங்கோட்டையில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.


இந்த நிலையில் வறண்ட வானிலையின் காரணமாக வெயில் தாக்கத்தால் தமிழ்நாட்டில் மேலும் சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க கூடும். அப்போது இரண்டு முதல் நான்கு டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் உயரக்கூடும் எனவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாகவும், வெப்ப சலனத்தால் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்