மோடியைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக.. நாளை தமிழகத்திற்கு வருகிறார்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Manjula Devi
Apr 11, 2024,11:31 AM IST

சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக நாளை தமிழ்நாட்டுக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஏழாவது முறையாக இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தார்.  சென்னை, வேலூர், நீலகிரி, ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் இறங்கினார்.


இந்த நிலையில் மீண்டும் பாஜகவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் இரண்டு நாள் பயணமாக நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிக்க இருக்கிறார்.


காரைக்குடி ரோடுஷோ ரத்து




சிவகங்கை மற்றும் மதுரையில் நாளை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதில் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காரைக்குடி ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது 13ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதை முடித்துவிட்டு அன்று மாலை நாகப்பட்டினத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.


இதனையடுத்து தென்காசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தென்காசியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார். 


இந்த பயணத்தின் இடையே, அமைச்சர் அமித்ஷா மதுரை மீனாட்சி அம்மனை நாளை தரிசனம்  செய்ய உள்ளார். மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நாளை மீனாட்சி அம்மனுக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை முதல் சாமி திருவீதி உலா வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் மதுரையில் வீதி உலா வரும் மீனாட்சி அம்மனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்த கோடிகள் நான்கு மாசி வீதியையும் வலம் வருவர்‌. அப்போது அமித்ஷாவும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வருவதால் மக்கள் எந்த அளவிற்கு சாமியை தரிசனம் செய்ய காவல்துறையினர் அனுமதிக்கப்படுவார்கள் என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.