தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

Meenakshi
Oct 23, 2024,05:10 PM IST

மதுரை: மதுரையில் மருதுபாண்டியர் நினைவு தினம், தேவர் ஜெயந்தி விழா ஆகியவற்றை முன்னிட்டு அக்.27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை நடைபெறவுள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் ஆயிரக்கணக்கானோர் இவர்களது நினைவிடத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்துவார்கள்.




இந்த நிகழ்ச்சியில், முக்கிய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்பினர்கள், பொதுமக்கள் என அதிகளவில் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினரால் பலப்படுத்தப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வாகும்.


அதேபோல மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கம்.  அந்த வகையில், இந்தாண்டு மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் வரும் அக்டோபர் 27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  சங்கீதா உத்தரவிட்டுள்ளார். 


இவை தவிர, மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவைகளும் 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்