காதலை வெளிப்படுத்த பெண்ணின் கையைப் பிடிப்பது தவறல்ல.. பாம்பே ஹைகோர்ட்!

Su.tha Arivalagan
Mar 01, 2023,11:24 AM IST
மும்பை: பாலியல் ரீதியிலான எண்ணத்துடன் இல்லாமல், காதலை வெளிப்படுத்துவதற்காக ஒரு பெண்ணின் கையைப் பிடிப்பது பாலியல் தொந்தரவு ஆகாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



மும்பையைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் தன்ராஜ் பாபுசிங் ரத்தோட். இவரது ஆட்டோவில் 17 வயது பெண் ஒருவர் தினசரி பள்ளிக்குச் செல்வது வழக்கம். 2022ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி ஆட்டோவில் யாரும் இல்லாத சமயத்தில், அந்தப் பெண்ணிடம் தன்ராஜ் தான் அவரைக் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் அப்பெண்.

இந்த நிலையில் இன்னொரு நாள் அந்தப்  பெண் சாலையில் நின்றிருப்பதைப் பார்த்த தன்ராஜ், அப்பெண்ணை அணுகி தனது ஆட்டோவில் வருமாறு கூறி அழைத்தார். ஆனால் பெண் வர மறுத்துள்ளார். அப்போது திடீரென அப்பெண்ணின் கையைப் பிடித்து எனது காதலை ஏற்றுக் கொள் என்று கெஞ்சியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தன்ராஜின் கைகளை உதறி விட்டு அங்கிருந்து ஓடினார். பின்னர் தனது தந்தையிடம் நடந்ததைக் கூற அவர் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் தன்ராஜைக் கைது செய்தனர்.

அதன் பின்னர் தன்ராஜ் ஜாமீன் கோரி  பாம்பே உயர்நீதிமன்றத்தில் மனு  செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி பாரதி டாங்க்ரே, பாலியல் நோக்கத்தில் அப்பெண்ணின் கையைப் பிடிக்கவில்லை தன்ராஜ். மாறாக தனது காதலை சொல்வதற்காகவே கையைப் பிடித்துள்ளார் என்பது நிரூபணமாகிறது. காதலை உணர்த்துவதற்காக கையைப் பிடிப்பதை பாலியல் தொந்தரவாக எடுத்துக் கொள்ள முடியாது. சாதாரண முறையில் கையைப் பிடிப்பது பெண்ணின் மானத்துக்குப் பங்கமானது என்று கூற முடியாது. எனவே இந்த குற்றத்திற்காக இவரை சிறையில் வைத்திருப்பது சரியானதல்ல என்று கூறி தன்ராஜுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

அதேசமயம், மீண்டும் இதுபோன்ற செயலில் தன்ராஜ் ஈடுபடக் கூடாது என்றும் அப்படி நடந்து கொண்டால், அவருக்கு கோர்ட் மீண்டும் கருணை காட்டாது என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.