தொடர் கனமழை... காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...ஒகேனக்கலில் குளிக்க, படகு இயக்க தடை

Meenakshi
Jul 16, 2024,03:29 PM IST

தருமபுரி:  தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்தால், பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும்  தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கர்நாடக மாநிலம் மைசூர், குடகு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் மொத்த கொள்ளவான 84 அடியில், தற்போது 83 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், கர்நாடகாவில்  உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.




கபினி அணையில் இருந்து 25,000 கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 550 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


நேற்று இரவு வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து விரைவில் அணை நிரம்ப வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.