ஆளெடுப்பும் குறைந்தது.. வேலையை விட்டுப் போவதும் குறைஞ்சிருச்சு!

Su.tha Arivalagan
Apr 18, 2023,11:19 AM IST
டெல்லி: வேலைக்கு ஆளெடுப்பதை பல்வேறு நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளதால், இருக்கிற  வேலையை விட்டு போவோரின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறதாம்.

இந்தியாவில் ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது 53 சதவீத அளவு என்ற நிலையில் இருந்தது.  இதுவே அதற்கு முந்தைய அக்டோபர் 2022 -  டிசம்பர் மாத காலகட்டத்தில் 64 சதவீத அளவுக்கு இருந்தது.

ஐடி துறையில் தற்போது ஒரு விதமான நிலையற்ற தன்மை காணப்படுகிறது. பிற துறைகளிலும் கூட இதே நிலைதான். இதனால் வேலைக்கு ஆள் எடுப்பதை பெரிய பெரிய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. மிகவும் எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தில் நடக்க அவை தீர்மானித்துள்ளன. ஹெல்த்கேர் உள்ளிட்ட சில துறைகளில் ஆளெடுப்பு அதிகம் உள்ளது. ஆனால் பெரும்பாலான துறைகளில் அது குறைந்து விட்டதாக இன்டீட் இன்தியா என்ற நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.




வேலைக்கு ஆள் எடுப்போர் குறைந்துவிட்டதால் வேலை தேடுவோரும் குறையத் தொடங்கியுள்ளனர். தற்போதைய வேலையிலேயே தொடர பலரும் முடிவெடுத்துள்ளனர். புதியவேலைக்கான தேடல் இருந்தாலும் கூட வேலையை விடுவது குறைந்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில்தான் வேலைக்கு ஆள் எடுப்பது அதிகமாக உள்ளது. அதாவது 71 சதவீதமாக இது உள்ளது. இதற்கு அடுத்து ஹெல்த்கேர் (64%). 3வது இடத்தில் ரியல் எஸ்டேட் 57 சதவீத ஆளெடுப்புடன் உள்ளது.

அதேசமயம், மீடியா துறையில் ஆளெடுப்பது 49 சதவீதமாக இறங்கி விட்டது. ஐடி துறை இன்னும் மோசம். வெறும் 29 சதவீத அளவுக்கே ஆளெடுப்பு நடக்கிறது. உற்பத்திப் பிரிவு 39 சதவீதமாக உள்ளது. புதிதாக வேலையில் சேர விரும்புவோர் பலரும் அலுவலகம் வந்து வேலை பார்க்க விரும்புவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  அதாவது 57 சதவீதம் பேர் அலுவலகம் வர விரும்புகிறார்களாம்.