பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக.. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்துப் பெண்!

Su.tha Arivalagan
Dec 26, 2023,06:31 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் போட்டியிடுகிறார். அவருக்கு இந்த வாய்ப்பை மறைந்த பெனாசிர் பூட்டோவின், பாகிஸ்தான் மக்கள் கட்சி கொடுத்துள்ளது.


இப்பெண்ணின் பெயர் சவீரா பர்காஷ். இவர் ஒரு டாக்டர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்.  முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் இதுவரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அந்த வகையில்  புதிய வரலாறு படைக்கிறார் சவீரா பர்காஷ்.


கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குட்பட்ட புனர் மாவட்டத்திலிருந்து (தொகுதி பெயர் பிகே 25) பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறார் சவீரா. இவர் தற்போது அந்த மாகாணத்தின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மகளிர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார். டிசம்பர் 23ம் தேதி அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.




பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 5 சதவித இட ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தலில் போட்டியிடுவது குறித்து சவீரா பர்காஷ் கூறுகையில், 2022ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் நான் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தேன். மனிதகுலத்துக்கு சேவையாற்றுவது எனது ரத்தத்தில் ஊறியுள்ளது. குடும்பத்தில் பலரும் டாக்டர்கள் என்பதால் இது இயல்பாகவே வந்து விட்டது. 


அரசு மருத்துவமனையில் நான் பணியாற்றியபோது ஏழைகளும், நலிவடைந்த பிரிவினரும் படும் கஷ்டங்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு எம்.பியாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எனது தந்தை தான் சார்ந்த பகுதியில் வசித்து வரும் ஏழைகளுக்காக பாடுபட்டவர். அவரது வழியைப் பின்பற்ற வேண்டும் என்று நான்  தீவிரமாக இருந்தேன். இப்போதுதான் அது நனவாகப் போகிறது என்றார் அவர்.


சவீரா பர்காஷின் தந்தை ஓம் பர்காஷ். கடந்த 35 வருடமாக ஏழைகளுக்காக சேவையாற்றியவர். சமீபத்தில்தான் அவர் மருத்துவப் பணியிலிருந்து  ஓய்வு பெற்றார் என்பது நினைவிருக்கலாம். இவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்தான்.