சென்னையில் இந்தி மாதம்.. தமிழை சிறுமைப்படுத்தாதீர்கள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Meenakshi
Oct 18, 2024,04:38 PM IST

சென்னை:   சென்னை தொலைக்காட்சி நிலைய பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாதம் நிறைவு  நாள் கொண்டாடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவது பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அவர் எழுதிய கடிதத்தில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 




சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் இந்தி மாத நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்


இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்.


இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்