ஹிமாச்சல் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் சிக்கல்.. 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

Su.tha Arivalagan
Feb 28, 2024,06:45 PM IST

சிம்லா: ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அரசியல் சிக்கல் அதிகரித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில், 15 பாஜக எம்எல்ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.


ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடந்த ஒரு இடத்தில் காங்கிரஸ் வெல்லும் சூழல் இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பாஜக வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார். காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு ஓட்டு போட்டதால் காங்கிரஸ் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டு விட்டது.


இந்த நிலையில், இன்று 15 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா அதிரடி உத்தரவிட்டுள்ளதால் நெருக்கடி மேலும் மோசமாகியுள்ளது. 




பட்ஜெட் தொடர் இன்று கூடவிருந்த நிலையில் சபாநாயகர் அறையில் குழுவிய பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை தற்காலிக நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 


முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜெய்ராம் தாக்கூர், சஸ்பெண்ட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா சஸ்பெண்ட் செய்யக் கூடும் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.  அப்போதுதான் அவர்களால் பட்ஜெட்டை எளிதாக தாக்கல் செய்ய முடியும் என்று திட்டமிட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.


நேற்று  காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டுப் போட்டதால் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் அரசு சிறுபான்மை அரசாகி விட்டது. முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால்  தங்களது எம்எல்ஏக்கள் சிலரை பாஜக கடத்தி வைத்துள்ளது. அவர்களை வைத்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயலுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.


இந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர் விக்கிரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. அரசு தப்புமா பாஜகவால் கைப்பற்றப்படுமா என்ற பெரும் குழப்ப சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன்தான் விக்கிரமாதித்யா சிங்.


68 உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாச்சல பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர். மீதமுள்ள 3 இடங்களில் சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர்.