மீண்டும் முதல்வரானார் ஹேமந்த் சோரன்.. ராஞ்சியில் பதவியேற்பு.. பெற்றோர், மனைவி பங்கேற்பு!

Manjula Devi
Jul 04, 2024,08:33 PM IST

ராஞ்சி:  ஜார்க்கண்ட் மாநில முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக சாம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இன்று ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலமோசடி தொடர்பாகவும், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கூறி அமலாக்கத்துறையினர் ஹேமந்த் சோரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர்  ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இதனையடுத்து  அம்மாநில புதிய முதல்வராக சோரன் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான, மூத்த தலைவர் சாம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். ஹேமந்த் சோரனை ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அமலாக்கத்துறையினர் அடைத்தனர். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து மீண்டும் அவர் முதல்வராக முடிவு செய்தார்.




ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பது என முடிவானது. இதையடுத்து  சாம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோரி ஹேமந்த் சோரன் கடிதம் கொடுத்தார். அதன் பேரில், அவரை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். 


இதையடுத்து இன்று மாலை ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷணன், பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரன், தாயார் மற்றும் மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.