பல மணி நேர அமலாக்கத்துறை விசாரணை.. ஹேமந்த் சோரன் ராஜினாமா.. புதிய முதல்வர் சம்பாய் சோரன்!

Su.tha Arivalagan
Jan 31, 2024,09:36 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்து வந்த ஹேமந்த் சோரன், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பல மணி நேர அமலாக்கத்துறை  விசாரணைக்குப் பின்னர் அவர் ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வராக ஹேமந்த்துக்கு மிகவும் நெருக்கமானவரான சம்பாய் சோரன் பதவியேற்கவுள்ளார்.


நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹேமந்த் சோரன்  அலுவலகத்திலும் ஏற்கனவே சோதனை நடத்தி பல லட்சம் ரூபாய், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.




இந்த நிலையில் பலமுறை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பல மணி நேரம் நடந்து வந்த விசாரணைக்குப் பின்னர்  சற்று முன்பு ஆளுநர் மாளிகைக்கு ஹேமந்த் சோரன் அழைத்து வரப்பட்டார். அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். 


அங்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த ஹேமந்த் சோரன் தனது ராஜினாமாக் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.  அவரது ராஜினாமாவை உடனடியாக ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து புதிய முதல்வராக சம்பாய் சோரனை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். இவர் ஹேமந்த் சோரனுக்கு மிகவும் நெருக்கமானவர், போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார், மூத்த தலைவரும் கூட. இவர்தான் அடுத்து ஜார்க்கண்ட் முதல்வராகிறார்.




புதிய ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரியுள்ளார். தனக்கு ஆதரவாக உள்ள 47 எம்எல்ஏக்களின் பெயர்ப் பட்டியலையும் சம்பாய் சோரன், ஆளுநரிடம் வழங்கியுள்ளார். அவற்றைப் பரிசீலித்த பின்னர் அழைப்பதாக ஆளுநர் அவருக்குத் தெரிவித்துள்ளார்.


தற்போது ஹேமந்த் சோரன் தொடர்ந்து அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை.