ஊர்களிலிருந்து திரும்பிய மக்கள்.. செம டிராபிக் ஜாம்.. இயல்பு நிலைக்குத் திரும்பியது சென்னை!

Meenakshi
Jan 18, 2024,10:38 AM IST

சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த லட்சக்கணக்கான மக்கள், மொத்தமாக நேற்று இரவு கிளம்பி சென்னை திரும்பினர். இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற மாநகரங்களில் தங்கி பணிபுரிவோர் மற்றும் கல்வி கற்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இந்த வருடம் பொங்கலுக்கு லம்ப்பாக ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.




சொந்த வாகனங்களிலும், பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். விமான நிலையங்களிலும் கூட கூட்டம் அலை மோதியது.  பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்த மக்கள்,  நேற்று இரவு கிளம்பி இன்று சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதால் பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அதே போல ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில், ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம் பஸ் நிலையப் பகுதி, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில்தான் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 




சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள்  பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் சென்றதினால், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. ரயில் நிலயங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் என்று இல்லாமல் சென்னை மற்றும் சென்னையை சுற்றிய அனைத்து சாலைகளிலும் காலையில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.