விடாமல் பெய்யும் மழை.. கன மழையும் வருது.. உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி

Meenakshi
Nov 14, 2023,02:17 PM IST

சென்னை: தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகிறது கனமழை. பொதுமக்களை மழையில் இருந்து பாதுகாக்க சென்னை மாநகராட்சி அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால்  பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


இந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இன்று  கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.




சென்னையில் விடாமல் மழை


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு  மழை பெய்து வருகிறது. 

தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், வேளச்சேரி, மந்தைவெளி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னைக்கு 17ம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி அவசர உதவி எண்களை  அறிவித்துள்ளது. 04425-619206, 04425-619207, 04425-619208 என்ற எண்களையும், 1913 என்ற டோல் ப்ரீ எண்ணையும், 94454-77205 என்ற வாட்சப் எண்ணையும் அறிவித்துள்ளது. 


மழை தொடர்பான  ஆபத்தில் இருக்கும் போது இந்த எண்களை பயன்படுத்தி உதவி பெற்றுக்கொள்ளலாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது சென்னை மாநகராட்சி.