நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Meenakshi
Oct 17, 2024,04:01 PM IST

சென்னை: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய  6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்தம், பிறகு காற்றழுத்த மண்டலமாக மாறி, பிறகு வலுவடைந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. சென்னையில் அதிக அளவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் சென்னை வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.சில பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். 


இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோரப் பகுதியில் கடந்து சென்று விட்டதால் நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதும். இதனையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 

நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் வட தமிழகம்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.




வட தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலம் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் நாளை (அக்டோபர் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் அக்டோபர் 20ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


தமிழக கடலோரப் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளை சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்