மதுரையில் இன்றும் இடி மின்னலுடன் வெளுத்தடுத்த கன மழை.. பகலே இருளாய் மாறிய அதிசயம்!

Manjula Devi
Oct 25, 2024,04:41 PM IST

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் இரவு நேரம் போல கரு மேகங்கள் சூழ்ந்து மதுரையே இருட்டாக காணப்பட்டது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் நேற்று சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.இதனால் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் அவனியாபுரம், திருப்பரங்குன்றம், தெற்குவாசல், பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை மேகம் சூழ்ந்தது.




பகலா அல்லது இரவா என்பதே தெரியாத அளவு இருள் சூழ்ந்து  காணப்பட்டது. அதேசமயம், தல்லாகுளம், சிம்மக்கல், ஐயர் பங்களா, ஊமச்சிகுளம், திருப்பாலை, கோரிப்பாளையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி, கூடலூர், சமயநல்லூர், மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.


மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் வைகை ஆற்றிலும் தண்ணீர் இரு கரைகளைத் தொட்டபடி ஓடிக் கொண்டிருக்கிறது.


14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு


இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர்,திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத்தவிர தமிழ்நாட்டில் வரும் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெறிக்கப்பட்டுள்ளது.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தற்போது குற்றால அருவிகள் மற்றும் பாலருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்