ஜில்லுன்னு மாறிய சென்னை... சடசடவென.. திடீரென வெளுத்து வாங்கிய கனமழை

Aadmika
Aug 30, 2024,08:47 PM IST

சென்னை : சென்னையில் இன்று மாலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக சென்னையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து, ஊரே ஜில்லென ஊட்டி போல மாறி உள்ளது.


தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் அணைகள், குளங்கள், ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழைக்காலம் வரும் வரை குடிநீர் தட்டுப்பாடோ, விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடோ ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கர்நாடக அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைகள் உள்ளிட்ட அணைகள் நிரம்பின.




தென் மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் அதற்கு நேர் மாறாக வெயில் சுட்டெரித்து வந்தது. கோடை வெயிலே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த பக்கம் மழை கொஞ்சமாவாது பெய்யாதா என சென்னை மக்கள் ஏங்க துவங்கினர். 


அதே சமயம், சென்னை வானிலை மையமும் சென்னையில் மழை பெய்யும் என அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தது. என்னது மழையா?... இங்க வெயில் குறைந்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறோம் என சென்னை மக்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் அதிகாலையில் பல இடங்களில் லேசாக மழை பெய்த நிலையில் நேற்று முதல் மீண்டும் வெயில் வெளுக்க துவங்கியது.


இந்நிலையில் இன்று மாலைக்கு மேல் பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தி.நகர், தாம்பரம், அண்ணாசாலை, அசோக் நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களிலும் பலத்த காற்றுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் சற்று தணிந்துள்ளது.



 சென்னையில் மழை துவங்கிய சிறிது நேரத்திலேயே #ChennaiRains என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாக துவங்கி விட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்