2வது நாளாக.. சென்னை, புறநகர்களில் இடி மின்னலுடன்.. மீண்டும் புயல் காற்றுடன் கனமழை

Aadmika
Jun 18, 2024,10:19 PM IST

சென்னை : சென்னையில் இன்று (ஜூன் 18) இரவும் புயல் காற்றுடன் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்திருந்தார். அது போலவே பல இடங்களில் பலத்த இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.


கோடை காலம் முடிவிற்கு வந்த பிறகும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. வெயில் உக்கிரம் அடையும் என எதிர்பார்க்கப்பட்ட அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மற்றொரு புறம் சென்னை போன்ற நகரங்களில் வெயில் வாட்டி எடுத்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தாலும் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. பல இடங்களில் வெயில் சதமடித்தது.




நேற்றும் சென்னையில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திடீரென நள்ளிரவில் எதிர்பாராத விதமாக பெரும் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மரக்கிளை முறிந்து விழுந்தன. சென்னையின் பல பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் திடீரென அடித்த புயல் காற்றால் மக்கள் மிரண்டு போய் விட்டனர்.


இதற்கிடையில் இன்று இரவும் சென்னையில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்திருந்தார். அது போலவே  சென்னை முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று போலவே இன்றும் கனமழை பெய்ததால் சென்னையே வெப்பம் தணிந்து ஜில்லென்று மாறி உள்ளது. சென்னையில் தி.நகர், மாம்பலம், அண்ணாசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.




புறநகர்களான தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், பூந்தமல்லி, மாங்காடு, போரூர், நகரில்  நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. 


தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகத்தில் புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் உட் பகுதியிலும், வேலூர், சிவகங்கை, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. கேரளா, கர்நாடகா, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், வால்பாறை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பருவமழை தீவிரமடையும். 


முதல் முறையாக மலையோரப் பகுதிகளில் ஜூன் 21 அல்லது ஜூன் 22 முதல் கனமழை பெய்யும். இது 5 முதல் 6 நாட்கள் வரை தொடரும் என தெரிவித்துள்ளார்.