தமிழ்நாட்டில் இன்று.. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. கோடை பருவமழை கணக்கீடு தொடக்கம்..!

Manjula Devi
Mar 01, 2025,01:46 PM IST

சென்னை: இன்று மார்ச் மாதம் தொடங்கியதை அடுத்து கோடைகால பருவமழை கணக்கீடும் துவங்கி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டின் அநேக இடங்களில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதற்கிடையே இன்று மார்ச் மாசம் தொடங்கியதை அடுத்து கோடைகால பருவமழை கணக்கீடும் தொடங்கியுள்ளது.


இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 




அதன்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், நீலகிரி, கோவை, தென்காசி, மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.