சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Meenakshi
Dec 16, 2023,10:29 AM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் பெய்து வருகிறது. மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இன்னும் முழுமையாக புயல் தாக்கத்திலிருந்து மக்கள் வெளியே வராத நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். 


10 நாள் இடைவெளி விட்டு  மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக  இன்று முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில்


அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,  மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழைக்கு  வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது


நாளை மழை பெய்யும் மாவட்டங்கள்


தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை டிசம்பர் 17ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம்,  விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர்  மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென் மாவட்டங்கள், டெல்டாவில் 2 நாட்களுக்கு கன மழை உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது வானிலை மையம்.