சந்திரனைத் தொட்டு என்ன புண்ணியம்.. இந்த மழை வெள்ளத்தை தடுக்க முடியலையே!

Su.tha Arivalagan
Aug 24, 2023,06:47 PM IST

சென்னை : சென்னையின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த ஒரு நாள் மழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி விட்டது.


தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தினாபுரத்தில் பல பகுதிகளில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதாலும், ஏற்கனவே சாலைகள் மோசமாக இருப்பதாலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் மக்கள் பெரும் துயருக்குள்ளானார்கள்.




சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் பகலில் வெயில் கடுமையாக இருந்து அனல் காற்று வீசும் சூழல் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வழக்கத்தை விட மிக அதிகமாக சென்னையில் பல பகுதிகளிலும் மிக அதிக அளவிலான கனமழை கொட்டி தீர்த்தது.


தி.நகர், அண்ணாசாலை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. விடிய விடிய பெய்து வந்த இந்த கன மழையால் சென்னையில் ஒரு சில தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது . புறநகர்களிலும் இதே நிலைதான்.


தாம்பரம் மாநகராட்சி


தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அஸ்தினாபுரம், திருமலைநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன. நடக்கக் கூட தகுதி இல்லாத அளவுக்கு சாலைகள் உள்ளன. மக்கள் எத்தனையோ முறை குமுறியும் கூட எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது மாநகராட்சி.




சாலைகள் மோசமாக உள்ள நிலையில்  தற்போது அங்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதை வெயில் காலத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். மழை பெய்யும் சமயத்தில் தொடங்கியதால் இப்போது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆங்காங்கே சாலைகளை பெயர்த்து எடுத்துள்ளதால் மழை நீர் வெள்ளம் போல தேங்கி பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகத் தொடங்கியுள்ளது.




குறிப்பாக 12, 13 ஆகிய தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மெயின் ரோட்டில் உள்ள ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரை எப்படிக் கடத்துவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டுள்ளனர். இன்றும் மழை பெய்தால் நிலைமை மோசமாகும் அளவுக்கு உள்ளது. தற்போது மோட்டார் பம்ப் வைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. 


ஒட்டுமொத்த தேசமும் நிலவை இந்தியா வென்றதை நேற்று கொண்டாடித் தீர்த்தது... ஆனால் இப்போதும் கூட நம்மால் முறையான மழை நீர் வடிகாலை செய்ய முடியாமல் இருப்பது வேதனையானது.