இன்று முதல் 3 நாட்கள்.. கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே ரெடியா!

Su.tha Arivalagan
Aug 30, 2023,11:08 AM IST
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு படிப்படியாக மழை தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,  குமரிக்கடலை ஒட்டி உள்ள பகுதியில் மேல் அடுக்கு வளிமண்டல சுழற்சி  மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்குத் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளும் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.



அதனால் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல்  லேசானது வரை யிலான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் சென்னையில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் ,ராமநாதபுரம் ,தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விழுப்புரம் ,கடலூர் ,சேலம் ,தென்காசி போன்ற மாவட்டங்களில் ஒரே இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள திருவள்ளூர், நீலகிரி, கோவை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் 14 சென்டிமீட்டர் மழையும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 12 சென்டிமீட்டர் மழையும் ,லோயர் கோதையாறு மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் தலா 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை  ஒட்டி உள்ள பகுதிகளில் அதிதீவிர கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.