தமிழ்நாட்டில்.. 23, 24, 25, தேதிகளில்.. அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை.. வானிலை மையம்

Manjula Devi
Jun 21, 2024,09:06 PM IST

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வெப்பம் குறைந்து குளுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் குஷியில் உள்ளனர். 


குறிப்பாக நேற்று இரவு சென்னை  திருவண்ணாமலை கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. 




இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி,தமிழகத்தில் ஜூன் 23,24, 25, ஆகிய மூன்று நாட்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனால் இந்த மூன்று நாட்கள் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 7 நாட்கள் பரவலாக மிதமான மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுதவிர, கர்நாடகாவில் நாளை மிக கனமழையும், நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல கேரளாவில் இன்றும், நாளையும் மிக கனமழையும், நாளை மறுநாள் முதல் 3 நாட்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம்: 


கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, ஆகிய எட்டு மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்கள் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.