வலுப் பெற்றது தாழ்வு மண்டலம்.. தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

Manjula Devi
Jul 27, 2024,05:16 PM IST

சென்னை:   வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தற்போது வரை கனமழை நீடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் அப்பர் பவானி 9 சென்டிமீட்டர், சேரங்கோடு 7.5 சென்டிமீட்டர், குந்தா 6.6 சென்டிமீட்டர், எமரால்டு 5.2 செமீ, நடுவட்டம் 4.5 செமீ, கூடலூரில் 3.5 செமீ மழையும் பெய்துள்ளது.




இந்த நிலையில் வங்க கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம்,வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதனால் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு இன்று எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர கர்நாடகாவில் இன்று ஒரு சில இடங்களில் கன மழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.