மழை வருது மழை வருது.. மறக்காம குடையுடன் போங்க.. இன்றும், நாளையும் கன மழைக்கான.. எல்லோ அலர்ட்!

Manjula Devi
Aug 12, 2024,06:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கன மழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழ்நிலை நிலவி வருவதுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. 

பெரும்பான பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இரவில் பெய்யும் மழையால்  பல கிராமங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால்  மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் கொடைக்கானலிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடியே படகு சவாரி செய்தனர்.



இந்த நிலையில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மழை குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும் நாளையும் எல்லோ அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கனமழை: 

மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம்,கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை: 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை விட்டு விட்டுப் பரவலாக மழை பெய்ததால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. காலையில் மீண்டும் வெயில் அடித்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்