Heavy rain forecast: தமிழ்நாட்டில்.. இன்றும்,நாளையும்.. கனமழைக்கான.. Yellow Alert!

Manjula Devi
Jul 15, 2024,05:41 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மலைப்பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள்  குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,புலி அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு:




திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி,கோயம்புத்தூர் ,திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி தேவாலாவில் 7.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  அவலாஞ்சியில் 6.4 சென்டிமீட்டர், சேரங்கோடு 6.2 செமீ, பந்தலூர், நடுவட்டம் மற்றும் கிளன்மார்க்கில் தலா 5.5 செமீ மழை பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டிற்கு  எல்லோ அலர்ட்:


தமிழ்நாட்டில் இன்றும்,நாளையும் இரண்டு நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 7 முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும் நாளையும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஏழு நாட்கள் மிதமான மழை: 


தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஏழு நாட்களும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


கேரளா, கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்:


கேரளா மற்றும் கரநாடகாவிற்கு இன்று ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக  அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.