மக்களே கவனம்.. தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவில் நாளையும்  கனமழை நீடிக்குமாம்..!

Su.tha Arivalagan
Nov 09, 2023,06:10 PM IST


சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளையும்  கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.


தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியால், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் காற்றின் திசையால் உருவான மேகக் கூட்டத்தின் காரணமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று மிக கனமழை மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.




கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் , தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


இதேபோல நாளையும் தென் மாவட்டங்களில்  கனமழை  தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கும் நாளை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மற்றும் கன மழை பெய்து வருவதால் வடகிழக்குப் பருவ மழையின் பற்றாக்குறை விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உபரி மழைப்பொழிவு கிடைத்துள்ளது. வட தமிழ்நாட்டில்தான் பற்றாக்குறை மழை தொடர்கிறது.