தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை .. பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Su.tha Arivalagan
Nov 14, 2023,08:39 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


வட கிழக்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.


இதைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, கந்தர்வகோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




அரியலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,  நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது


தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. 


அதாவது, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.