சென்னை ஓவர்.. இப்ப தென் மாவட்டங்களின் டர்ன்.. 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Aadmika
Dec 10, 2023,03:34 PM IST

சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை வாட்டி வதைத்த மழை தற்போது தெற்கு பக்கமாக நகர்ந்துள்ளது. மிச்சாங் புயல், கனமழை ஆகியவை ஓய்ந்தாலும் சென்னை மக்கள் இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து மீளவில்லை. பல இடங்களில் வீடுகளை சூழ்ந்திருக்கும் வெள்ளநீரால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 


இந்நிலையில் வங்கடக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தத்தால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அணைகள் பலவும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பல ஆறுகளில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் தவித்து வரும் நெல்லை மாவட்ட மக்களுக்கு இந்த செய்தி இன்னும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (டிசம்பர் 11) தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.