நள்ளிரவில் அந்நியனாக மாறி சென்னையை வச்சு செய்த கன மழை.. பேய்க் காற்றுடன்.. வெளுத்து வாங்கியது!

Su.tha Arivalagan
Jun 18, 2024,08:51 AM IST

சென்னை: சென்னையின் புறநகர்களிலும், நகரின் சில பகுதிகளிலும் நள்ளிரவுக்கு மேல் பலத்த காற்றுடன், பேய் மழை கொட்டித் தீர்த்து விட்டது. இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் , மின்சார வயர்கள் விழுந்து இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டது.


சென்னையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக புறநகர்களைத்தான் வச்சு செய்து விட்டது இந்த திடீர் கன மழை. புயல் காலங்களில் வீசுவது போல மிக பலத்த காற்றுடன் கூடிய இந்த திடீர் கன மழையால் மக்கள் குழப்பமடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை வெளுத்து வாங்கியது. காற்று கொஞ்சம் கூட வேகம் குறையாமல் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் கன மழை பெய்ததால் மக்கள் வியப்படைந்தனர். அதேசமயம், ஏன் இப்படி திடீரென்று மழை வெளுக்கிறது என்று புரியாமல் பலர் குழப்பமடைந்தனர்.


இந்த பேய் மழை நகரிலும், புறநகர்களிலும் பரவலாக பெய்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர்கள் பலவற்றில் மரங்கள் விழுந்தன. சில இடங்களில் மின்சார வயர்களும் அறுந்து விழுந்தன. 




இந்த திடீர் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போட்டிருந்த பதிவில், ராயலசீமாவிலிருந்து வந்த மேகக் கூட்டத்தால் சென்னையில் கன மழை கொட்டியுள்ளது. மிகமிக தீவிரமான மழை இது. பலத்த காற்றுடன் கூடிய இந்த மழையானது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் (கேடிசிசி பெல்ட்) பல இடங்களில் கன மழையைக் கொட்டியுள்ளது.


பூந்தமல்லியில் 104 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டியுள்ளது. சோழிங்கநல்லூர் 82, செம்பரம்பாக்கம் 79 மில்லி மீட்டர், திருவேற்காடு 62 மில்லி மீட்டர், மடிப்பாக்கம் 50 மில்லி மீட்டர், மீனம்பாக்கம் 43 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமைக்கும் கன மழை வாய்ப்புள்ளது. இந்த ஜூன் மாதம் கேடிசிசி பெல்ட் மாவட்டங்களுக்கு நல்ல மழையைக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.


மாங்காடு, பூந்தமல்லி, தாம்பரம், தென் சென்னை முழுவதும் மிகப் பெரிய அளவில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. பெரும்பாலான இடங்களில் இது அதி தீவிரமாக இருந்தது. மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசியுள்ளது. நகரின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. வட சென்னையில் குறைவுதான் என்று கூறியுள்ளார் அவர்.