விடாமல் வெளுக்கும் மழை.. தத்தளிக்கும் மணிப்பூர்.. பாத்திரத்தில் வைத்து பச்சிளம் குழந்தை மீட்பு!

Meenakshi
May 30, 2024,05:03 PM IST

இம்பால்: ரெமல் புயல் காரணமாக மணிப்பூரில் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். வெள்ள பெருக்கில் மாட்டிய பச்சிளம் குழந்தையை பாத்திரத்தில் வைத்து மீட்புக்  குழுவினர் பத்திரமாக மீட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


ரெமல் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள பல பகுதிகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கிய பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர். தற்போது தென் மேற்குப் பருவ மழையும் சேர்ந்து கொண்டுள்ளதால் நிலைமை மோசமாகியுள்ளது.




தொடர் மழையால்  மணிப்பூரில் உள்ள இம்பால்- ஜிரிபாம் சாலையில் நிலச்சரிவு எற்பட்டுள்ளது. இந்த மழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து கிடப்பதால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  நிலச்சரிவில் கனரக லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அதனை மீட்புக் குழுவினர் மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.


தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்பால் பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளபெருக்கு எற்பட்டுள்ளதால்,  ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பச்சிளம் குழந்தை வெள்ளத்தில் சிக்கியது. அந்த குழந்தையை மீட்பு குழுவினர்களும், பொதுமக்களும் பாத்திரத்தில் வைத்து மீட்டு கரை சேர்த்தனர். இந்த பேய் மழையில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், 17 பேர்  காயம் அடைந்துள்ளதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்து வருகின்றனர். சேதம் அடைந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அசாம் மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.