மக்களே உஷார்.. தமிழ்நாட்டில்.. இன்னும் 2 நாட்கள் வெப்ப அலை வீசும்.. சென்னை வானிலை மையம் தகவல்

Manjula Devi
May 06, 2024,06:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை  வீசும் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தத நிலையில்,  தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை  வீச கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வட தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும். அப்போது வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும்.  இது தவிர தமிழ்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப அலை வீசும். உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹுட் வரை வெயில் கொளுத்தும் என அறிவித்துள்ளது.




தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 43.8 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 43.4, திருப்பத்தூரில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.  வேலூரில் 42.1, மதுரை விமான நிலையத்தில் 41.6, திருச்சி விமான நிலையம், திருத்தணியில் தலா 41.7, சேலம் மற்றும் பாளையங்கோட்டையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 39.4 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவானது.


7, 8ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 7ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். 8ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


9ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான 3 நாட்களிலும் அதிகபட்ச வெப்ப நிலையானது 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.