வெப்ப அலை இன்றே கடைசி.. வெப்பச் சலனத்தால் பரவலாக கன மழை.. தமிழ்நாடு வெதர்மேன்

Manjula Devi
Jun 01, 2024,12:31 PM IST

சென்னை:  வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


இதற்கிடையே, இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.




தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பரவலாக அனல் காற்று வீசி வருகிறது. இந்த வெப்ப சலன தாக்கத்தால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தென் தமிழ்நாட்டின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.


இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


அதேபோல் நாளை ஜூன் இரண்டாம் தேதி திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆகிய 11 மாவட்டங்களில் நாளை  கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?




இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தர்மபுரி திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று  நிலவும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக கனமழை பெய்யும். வட தமிழ்நாட்டில் மக்களை வாட்டி எடுத்த வெப்ப அலை இன்றுடன் முடிவுக்கு வரும். இப்போது பெய்யும் மழை தொடக்கம்தான். மிகப் பெரிய அளவிலான மழைக்கு நாளைக்கு வாய்ப்புள்ளது என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.