அகில உலக சூப்பர் ஸ்டார் இப்போ தெரியுமா.. சாட்சாத் "வெப்ப அலை"தான்.. ஆசியாவை வச்சு செய்யுது!

Su.tha Arivalagan
May 02, 2024,06:40 PM IST

டெல்லி: தென் கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை உயர்ந்து காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


பல நாடுகளில் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனராம். இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளுக்கு ஏற்கனவே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் வரலாறு காணாத வெயில் வெளுத்து வருகிறது. அங்கு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதுதொடர்பான உத்தரவை அந்த நாட்டு பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.




அதேபோல பொதுமக்களும் பகல் நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதிகம் தண்ணீர் குடிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர்ப்பற்றாக்குறையும், வறட்சியும் நிலவுகிறது. மின்சார விநியோகமும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் சராசரியாக 113 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது. 


இதேபோல கம்போடியா, மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வெயில் வெளுத்து வருகிறது. கம்போடியாவில் 170 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் வெளுத்தெடுத்து வபருகிறதாம். அதிகபட்சமாக 109 டிகிரி வரை அங்கு வெயில் பதிவாகியுள்ளது.


வடக்கு தாய்லாந்தில் 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகி மக்களை வறுத்து வருகிறது. தலைநகர் பாங்காக்கில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களை அச்சுறுத்தியுள்ளது. 


இந்தியாவிலும் கடுமையான வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.  தமிழ்நாட்டிலும் வெயில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளுத்தெடுத்து வருகிறது. அடுத்து கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், இன்னும் வெயில் கடுமையாக வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதேபோல வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு ஆசிய மற்றம் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் வெயில் கடுமையாக உள்ளது.